March 13, 2014

மாயமான விமானத்தின் படத்தை வெளியிட்டது சீனா!

Posted Date : 11:32 (13/03/2014)Last updated : 12:29 (13/03/2014)
பீஜிங்: வியட்நாமின் தென்முனையில் கடற்பகுதியில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பொருட்கள் கிடந்ததை சீன செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு அரசு இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8ஆம் தேதி மாயமானது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது. மாயமான விமானத்தை சீனா, அமெரிக்கா, மலேசியா நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது. இந்த தகவல் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை, விமான தேடல் குழு, மீட்பு குழு ஆராய்ந்து வருகிறது.
இதனை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதி வரையில் விமானத்தை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரலாறு காணாத வகையில் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 10 செயற்கைக்கோள்கள் மூலம் தேடும் பணியில் சீனா தீவிரபடுத்தியுள்ளது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீனா செயற்கைக்கோள் ஒன்று வியட்நாமின் தென்முனையில் கடற்பகுதியில் மிதக்கும் பொருட்கள் கிடந்ததை கண்டுபிடித்துள்ளது என்று அந்நாட்டு அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாயமான விமானத்தில் உடைந்த பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தின் உடைந்த பொருள்தானா என்று உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: